காங்கிரஸ் பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை: புத்தாண்டு தினத்தில் கொடூரம்!
தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே புத்தாண்டு தினத்தன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே புத்தாண்டு தினத்தன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சிவா என்பவருக்கு 20 வயதில் யுவராஜ் என்ற மகன் இருந்தார். பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்ததாக கூறப்படும் இந்த யுவராஜ், தன் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுவதற்காக நேற்றிரவு வெளியே சென்றுள்ளார்.
மிக நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர், யுவராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் முருகேசன் தெரு அருகே உள்ள கால்வாயில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யுவராஜின் தந்தை அப்பகுதியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததாகவும், அதே பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.