காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்

 

காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்

லக்னோ: காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தேசிய அளவில் சில கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து கூட்டணியை இறுதி செய்துள்ளது. சில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில் வழக்கம்போலவே நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அனைவரது பார்வையும் அம்மாநிலத்தின் மீது திரும்பியுள்ளது. அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலும், ரேபரேலி தொகுதியில் சோனியாவும் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. எனினும், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி முக்கிய ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில், காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.