காங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்: ராகுலுக்கு அட்வைஸ் செய்த மூத்த தலைவர்!
காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கும் நேரம் வந்து விட்டதுஎன்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கும் நேரம் வந்து விட்டதுஎன்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செல்வாக்கு பெற்ற தொகுதியான அமேதியில் பாஜக நிர்வாகி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவருடைய ராஜினாமா கடிதம் இன்னும் காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேசும் போது, ‘காங்கிரஸ் கட்சியில் களையெடுக்கும் நேரம் வந்து விட்டது. அங்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. தேர்தல் வைத்து நல்ல தலைமைகளைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ராகுல் காந்தியின் ராஜினாமா தேவையற்றது. அவரால் மட்டுமே கட்சியைச் சரிவர வழிநடத்த முடியும். மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு அந்தத்தந்த மாநில தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியின் இந்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.