கழுத்தை நெரித்த கடன் பிரச்னை: குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற தாய்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

கழுத்தை நெரித்த கடன் பிரச்னை: குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற தாய்; அதிர்ச்சி தரும் சம்பவம்!

பெண் ஒருவர் குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : பெண் ஒருவர் குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் சிபிராஜ். இவருடைய 2-வது மனைவி சைஜா.  இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி என்ற மகளும், ஆதிதேஷ் என்ற மகனும் இருந்தனர். கேரளாவை சேர்ந்த சிபிராஜ் சினிமா மற்றும் இதர நிறுவனங்களுக்கு பைனாஸ் வாங்கி கொடுத்து அதன் மூலம், கிடைக்கும் கமிஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து சிறுநீரக பிரச்னை காரணமாக சிபிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். இதனால் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த சைஜா மிகுந்த சிரமத்துடன் அவர்களை வளர்த்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கணவர் வாங்கிய கடன்கள் கழுத்தை நெரிக்க, கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வர ஆரம்பித்துள்ளனர்.

crime

இந்நிலையில்  சைஜா மற்றும் அவரது குழந்தைகளைக் கேரளாவுக்கு அழைத்துச் செல்ல அவரது உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் அவர் கதவையோ திறக்காததால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாகப் பார்க்க மூவரும் படுக்கையில் மயங்கி கிடந்துள்ளனர்.  

இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் குழந்தைகள் ஸ்ரீலட்சுமி, ஆதிதேஷ் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர்.  சைஜா மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

police

இது குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவர் இறந்த பிறகு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சைஜா, கடன் தொல்லையால் குழந்தைகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.  அதனால் சம்பவத்தன்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்த அவர் அவர்களைக்  கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிபிராஜின் முதல் மனைவிக்கு போன் செய்த சைஜா, கடன் தொல்லை குறித்துக் கூறியுள்ளார். அதற்கு அவரோ தம்பியை அனுப்பி வைக்கிறேன். குழந்தைகளுடன் கேரளாவுக்கு வந்துவிடுமாறு கூறியதாகவும், அதற்கு சைஜா சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. 

கடன் நெருக்கடியால் வாழ வழியின்றி பெண் எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.