‘கல்யாணம் வேண்டாம்…ப்ளீஸ்’…துப்பாக்கி சுடுதல் சாதனையாளர் சசிக்குமார் தற்கொலை!
அரசு அனுமதியுடன் இயங்க கூடிய துப்பாக்கி சுடுதல் பயிற்சி தரும் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதக்கங்களை வென்று பிரபலமாக வலம்வந்த திருச்சி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் விமானநிலையம் அருகே உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர் நல்லத் தம்பி. இவருக்கு ரெஜினா என்ற மனைவியும், சசிக்குமார் என்ற மகனும் உள்ளனர். சசிக்குமார் துப்பாக்கி சுடுதலில் சர்வேதச சாதனையாளர் ஆவார்.இவர் அதே பகுதியில் அரசு அனுமதியுடன் இயங்க கூடிய துப்பாக்கி சுடுதல் பயிற்சி தரும் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 31 வயதாகும் சசிக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதால் அவருக்கு பெற்றோர் பெண் ஒருவரை பார்த்து பேசி முடித்துள்ளனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சசிக்குமார் வீட்டில் தகராறு செய்துள்ளார். நேற்றுகாலை இந்த பிரச்னை வீட்டில் பெரிதாக வெடிக்கவே, ஆத்திரமடைந்த சசிக்குமார் தனது அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டதுடன், பயிற்சிக்காக வைத்திருந்த துப்பாக்கியை நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு கதவை உடைத்துப் பார்த்த போது சசிக்குமார் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சசிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.