கர்நாடகாவில் புகை பிடிக்க தடை

 

கர்நாடகாவில் புகை பிடிக்க தடை

கர்நாடக மாநிலம் முழுவதும் புகை பிடிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் புகை பிடிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாகவும் இதனால் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன என்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து அங்கு புகையிலை பொருட்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு நகர மேம்பாட்டு துறை அமைச்சர் யு.டி.காதர் நிருபர்களிடம் கூறுகையில், 

கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறது என்றார்.