கர்தாபூர் வரும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தகவல்

 

கர்தாபூர் வரும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தகவல்

இந்தியாவிலிருந்து கர்தாபூர் குருத்வாராவுக்கு வரும் யாத்ரீகர்களிடம் 2 நாட்களுக்கும் மட்டும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தை கர்தார்பூர் பகுதியில் கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு கர்தார்பூரில் அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி உள்ளது. இதனால் அந்நாட்டுக்கு விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது.

கர்தாபூர் குருத்வாரா

இதனையடுத்து இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வழித்தடம் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்திய பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அடுத்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அதற்கு அடுத்த நாள் (9ம் தேதி) அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும்  தொடங்கி வைக்க உள்ளனர். நவம்பர் 11ம் தேதி முதல் யாத்ரீகர்கள் கர்தார்பூர் குருத்வாராவுக்கு புனித பயணம் மேற்கொள்ளலாம்.

அதேசமயம் கர்தார்பூர் வழித்தடம் வாயிலாக குருத்வாராவுக்கு வரும் இந்திய யாத்ரீகர்களிடம் சுமார் ரூ.1,400 (20 அமெரிக்க டாலர்) சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. இந்நிலையில், கர்தார்பூர் வரும் இந்திய யாத்ரீகர்களிடம் 2 நாட்களுக்கு அனுமதி கட்டணம் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். 

கர்தாபூர் வழித்தடம்

இது தொடர்பாக இம்ரான் டிவிட்டரில், இந்தியாவிலிருந்து கர்தாபூர் குருத்வாராவுக்கும் வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் அவசியல் இல்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தாலே போதும். இனி பயணத்துக்கு 10 நாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும், கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நாளன்றும், குருநானக்கின் 550 பிறந்தநாள் நினைவாக அதற்கு அடுத்த நாளும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என பதிவு செய்துள்ளார்.