கரையை கடந்தது தித்லி புயல்: ஒடிசாவில் கனமழை!

 

கரையை கடந்தது தித்லி புயல்: ஒடிசாவில் கனமழை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளதால் அங்குக் கனமழை பெய்து வருகிறது.

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தித்லி புயல், இன்று ஒடிசாவில் கரையைக் கடந்துள்ளதால் அங்குக் கனமழை பெய்து வருகிறது.

மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் தித்லி புயல் வலுவடைந்து, அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை ஒடிசாவின் கோபால்பூர் – வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதேபோல் அரபிக்கடலில் உள்ள தீவிர புயல் லூபன் தற்போது ஏமனில் இருந்து 610 கிலோ மீட்டரில் நிலைகொண்டுள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

ஒடிசாவில் புயல் கரையைக் கடந்துள்ளதால்  ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிகப் பலத்த மழை, மிதமிஞ்சிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இதையடுத்து மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மேற்கு அரபிக்கடலுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஒடிசாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.