கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

 

கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிச்சாமியை சாதி ரீதியாக தாக்கி பேசியதுடன், காவல்துறை அதிகாரி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சித்தார்.

இதையடுத்து, கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 23ம் தேதி அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, கருணாஸ் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், கருணாஸை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, கருணாஸ் வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து, எம்எல்ஏ கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.