கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றம் வந்த தெலுங்கு தேச எம்பி!

 

கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றம் வந்த தெலுங்கு தேச எம்பி!

புதுடெல்லி: தெலுங்கு தேச எம்.பி நரமல்லி சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்தது வியப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் மத்திய அரசை எதிர்க்கும் விதமாக  நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன், ஹிட்லர்  என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக அணிகளைத் திரட்டி சந்திரபாபு நாயுடு  மேற்கொண்டுள்ள  முயற்சிக்கு   திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து  இதற்கான கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதன் காரணமாக சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு என்று வீல் சேரில் அவரை உட்கார வைத்து ஒருவர் தள்ளி கொண்டு வந்தார். அப்போது கருணாநிதி போலவே சிவபிரசாத் சேரில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையை தூக்கிக் காட்டி வந்தார். பிறகு சேரில் இருந்து எழுந்து கையை அசைத்துக் காட்டியபடி நடந்து அவைக்குள் சென்றார். இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.