கமலுக்கு நன்றி தெரிவித்த சூர்யா: காரணம் இதுதான்!
திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாகச் செயலாற்ற ஊக்கமளிக்கிறது
புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசிய சூர்யாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு கூறியதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, புதிய கல்வி கொள்கை குறித்தும், மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது என்றும் பேசினார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2019
இதையடுத்து சூர்யாவின் பேச்சு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காகத் தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதியகல்விக் குறித்த தம்பி சூர்யாவில் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கமல் ஹாசனுக்கு நடிகர் சூர்யா தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியுள்ள அறிக்கையில், ‘கல்விக் கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும் தங்களின் மக்கள் நீதி மையம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள். திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாகச் செயலாற்ற ஊக்கமளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சூர்யாவிற்கு ஆதரவாகச் சீமான், பா.ரஞ்சித், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.