கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

 

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கத்தோலிக்க ஆலயம் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் ஆகும்.இந்த ஆலயம் ரோமிய கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் தங்கப் பீடத்தில் அலங்கார மாதாவின் அற்புத சுருபத்தை அமைத்துள்ளனர். 

kanya

பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் சவேரியார் திருப்பண்டம் அடங்கிய கதிர் பாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, 7 புனிதர்களின் திருப்பண்டம் அடங்கிய வெள்ளிப் பாத்திரமும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் பல்வேறு அற்புதங்கள் நடைபெற்று உள்ளது. உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் . இந்தாண்டிற்கான  திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

kanya

இதனை அடுத்து நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும் 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடி பவனியும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, ஆராதனை ஆகியவை நடைபெற்றது அதனையடுத்து  மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து திருப்பலி மற்றும் மறையுரையாற்றினார்.

அதனை தொடர்ந்து இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.