கன்னியாகுமரியில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சன் குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியில் இருந்த போது அவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தனர் . அதில் படுகாயமடைந்த வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இதைகொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுட்டுக் கொல்லப்பட எஸ்.ஐ வில்சன் கிட்டத்தட்ட 36 ஆண்டுக்காலம் பணியாற்றியவர். இந்த சம்பவம் குறித்து கேரளா காவல்துறை அளித்த தகவலின் பேரில், தமிழக தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ வில்சன் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார், அதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார்.
“எனது கணவர் குடும்பத்தைவிட காவல்துறையை அதிகம் நேசித்தவர்” என்று உயிரிழந்த வில்சனின் மனைவி கூறியிருப்பது மனவேதனை தருகிறது.
குற்றவாளிகள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! pic.twitter.com/1iVjaK74PM
— M.K.Stalin (@mkstalin) January 11, 2020
சோதனைச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி அங்கு பணியில் இருப்போருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உடனடியாக எடுத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.