கந்த சஷ்டி விரதம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
உள்ளத்திற்கும்,உடலுக்கும் நன்மை தருகின்ற கந்த சஷ்டி விரதத்தின் பயன்களை பற்றி பார்போம்
விரதங்கள் மக்களின் மன வலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன.சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும்
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.
இவ்விரதம் 08.11.2018 வியாழக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 13. 11.2018 செவ்வாய்க்கிழமை அன்று சூரசம்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.
முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி மனிதர்களின் உட்பகையாக உள்ள ஆறுவகை அசுரப் பண்புகளை காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை அழித்து நல்ல குணங்களை நிலை நாட்டுவதே கந்த சஷ்டி விரதத்தின் மகிமையாக போற்றப்படுகிறது.
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
உண்ணா நோன்பின் போது, உடல் ஓய்வடைகிறது.எல்லா உறுப்புக்களுக்கும் அமைதி கிட்டுகிறது. நரம்புகள் தளர்ச்சி நீங்குகின்றன. வெப்பநிலை மாறி தண்மை ஏற்படுகிறது. கழிவுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இயற்கை கொள்ளும் வழிகளில் உண்ணா நோன்பு மிகவும் சிறந்ததாக அமைந்திருக்கிறது. இரத்தமும் நிணநீரும் தூய்மையாக்கப்படுகின்றன.
காம உணர்வு தணிகிறது.தூய நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி,பகுத்தறிகின்ற ஆய்வுநிலை, நினைவு கூறும் சக்தி,இணைத்துக்காணும் அறிவு அதிகமாகின்றது.
உண்ணா நோன்பினால் இளையவரும், முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.இத்தனை சிறப்புகள் வாய்ந்த கந்த சஷ்டி விரதத்தினை அனைவரும் கடைப்பிடித்து சகல சம்பத்துகளையும் பெற்று வாழலாம்.