கணவனால் கைவிடப்பட்டு சாலையில் வசித்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய தன்னார்வலர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்!
அவருக்கு தன்னார்வலர்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்ததன் பேரில் பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து மதுரையில் சாலையோரம் வசிக்கும் மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கும் மகத்தான பணியை இதயம், பூம், நியூ கிரியேஷன்ஸ், அன்னை இல்லம், சுரபி டிரஸ்ட் ஆகிய 5 தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையோரத்தில் சத்யா(30) என்னும் கர்ப்பிணி மீட்கப்பட்டார். அவருக்கு தன்னார்வலர்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்ததன் பேரில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
சத்யாவிடம் தன்னார்வலர்கள் நடத்திய விசாரணையில் அவர் கோவையை சேர்ந்தவர் என்றும் கணவரால் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு, உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு வளைகாப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் முகாம்களில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சத்யாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்த தன்னார்வலர்கள், வளைக்காப்புக்கு ஏற்பாடு செய்தனர். அதன் படி நேற்று தன்னார்வ அமைப்புகளில் இருந்த பெண்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பெண்கள் என அனைவரும் இணைந்து சத்யாவுக்கு வளைகாப்பு செய்துள்ளனர். அதன் பின்னர் அவருக்கு பிரசவகாலம் நெருங்குவதால், சத்யா திருநகரில் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும், அங்கு அவருக்கு பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.