கட்சி ஓய்ந்து விட்டதா? உங்களுக்கு சவுக்கடி தான்: விஜயகாந்த் மகன் அதிரடி!

 

கட்சி ஓய்ந்து விட்டதா? உங்களுக்கு சவுக்கடி தான்: விஜயகாந்த் மகன் அதிரடி!

மணப்பாறை: தேமுதிகவின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கிறது என்று விஜயகாந்தின் மகன்  விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் கட்சி பணிகளை அவரது மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். இதையடுத்து விஜயகாந்தின் மகன்களும் அரசியலில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வந்த விஜய் பிரபாகரனுக்கு, மேளதாளத்துடன் தேமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுடன் புறப்பட்ட ஊர்வலம், பெரியார் சிலை திடல் வரை வந்தது. அங்கு விஜய் பிரபாகரன் தேமுதிக கொடியை ஏற்றி வைத்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிகவின் வளர்ச்சி அதிகமாக தான் இருக்கிறது. தனக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு, கட்சி ஓய்ந்துபோனது என்று கூறியவர்களுக்கு சவுக்கடி போல் உள்ளது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில், விஜயகாந்த் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு இங்குள்ள மக்களுக்கு எங்கள் மீது அன்பும் ஆதரவும்  உள்ளது என்று விஜய் பிரபாகரன் கூறியுள்ளார்.