கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

 

கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒர் இரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒர் இரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் தாமதமாக துவங்கிய வடகிழக்கு பருவமழை இதுவரை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், தென் மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் தென் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மீனவர்கள் குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். வருகிற 9-ம் தேதி அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான்  பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர், ராமநாதபுரம், கொளச்சல், ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் தலா 1 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.