கடன் தவணை திரும்ப செலுத்த 28ம் தேதி வரை அவகாசம்- உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு
டெல்லி
வங்கிக் கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தினை செப்டம்பர் 28 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சமாளிக்கும் விதமாக வங்கிக் கடன்களை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகை ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. தவணை செலுத்துவதில் இருந்து மட்டும் விலக்கு அளித்த வங்கிகள், வட்டி வசூலிப்பதை நிறுத்தவில்லை.
இதனை எதிர்த்து, ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா உள்ளிட்ட பலர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவில், நிறுத்தி வைக்கப்பட்ட தவணைக்கும் சேர்த்து வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன், அவற்றை ரத்து செய்து உத்தரவிடவும் கோரியிருந்தனர்.
இந்த மனு கடந்த 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செலுத்தப்படாத தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கடனை திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள் மீது 2 மாதங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டதுடன், விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் திடமான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பதை 2 வாரத்தில் அறிக்கையாக அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதுவரை கடன் தவணை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு, விசாரணையை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.