கடன் தவணை செலுத்த 3 மாசம் அவகாசம் இருந்தும், சம்பளத்திலிருந்து லோன் பிடித்தம்- ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி..

 

கடன் தவணை செலுத்த 3 மாசம் அவகாசம் இருந்தும், சம்பளத்திலிருந்து லோன் பிடித்தம்- ரயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி..

வங்கியில் கடன் தவணை கட்ட RBI மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பள பில்லில் லோன் பிடித்தம் செய்தது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியதை விட, மத்திய அரசு அறிவித்துள்ள 21நாள் ஊரடங்கு உத்தரவு மக்களை மேலும் கலக்கமடைய வைத்துள்ளது. நாட்டில் பலர் வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றனர். அடுத்தமாத வாடகை, வீடு செலவுக்கான பணம், வங்கிக்கடனுக்கான இஎம்ஐ போன்றவை பலரையும் தலைசுற்ற வைத்துள்ளது. கொரோனா கவலையை விட, கார் லோன், டூவீலருக்கான இஎம்ஐ, வீடுகளுக்கான இஎம்ஐ என அனைவரும் இஎம்ஐ கவலையில் மூழ்கியிருந்தனர். தேடித்தேடி வந்து கடன் கொடுத்த தனியார் வங்கிகள் கடனை எப்படி வசூலிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவுகள் எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் எனத் தெரியாததால் மக்கள் கவலையில் இருந்தனர். 

representative image

  இதனையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் , மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்டத்தேவையில்லை. கடன் வசூலை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார்.  2020, மார்ச் 1-ம் தேதியிலிருந்து அனைத்துக் கால கடன்களுக்கும் தவணைகளைச் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் அனுமதிக்கப்படுகிறது. அதாவது மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான இஎம்ஐ கட்டத்தேவையில்லை. கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் செலுத்துவது தள்ளிவைக்கப்படுகிறது. இந்த இஎம்ஐ-களை செலுத்த வங்கிகள் கூறும் காலத்தில் வேண்டும் எனவும், இதனால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்திருந்தார். 

representative image

இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கான மார்ச் மாத ஊதியம் இன்று அவரவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.. அதில் 3 மாத கடன் தவணை கட்ட கால அவகாசம் இருந்தும், சம்பளத்திலிருந்து லோன் பிடித்தம் செய்யப்பட்டிருப்பது ரயில்வே ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.