கடந்த டிசம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது…. நிம்மதி அடைந்த மோடி அரசு

 

கடந்த டிசம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது…. நிம்மதி அடைந்த மோடி அரசு

தொடர்ந்து 2 மாதமாக கடந்த டிசம்பரிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு இது பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

ஜி.எஸ்.டி. வசூல்

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 3 மாத காலத்தில் மாதந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தது மத்திய அரசுக்கு நிதிநெருக்கடியை உண்டாக்கியது.

ஜி.எஸ்.டி. வகைகள்

இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவாயாக மீண்டும் ரூ.1.03 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.19,962 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.26,792 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.48,099 கோடியும், செஸ் ரூ.8,331 கோடியும் அடங்கும். 2018 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூலாக மொத்தம் ரூ.97,276 கோடி மட்டுமே கிடைத்தது. கடந்த மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியதால், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.