கஞ்சா போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்: சீரழியும் இளையதலைமுறை; அதிர வைக்கும் சம்பவம்!

 

கஞ்சா போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்: சீரழியும் இளையதலைமுறை; அதிர வைக்கும்  சம்பவம்!

கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி: கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த டி.என்.பாளையம் எனப்படும் திம்பநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். ஐடிஐ படித்து வந்த இவர் தேசிய அளவில் கைப்பந்து விளையாட்டில் ஜூனியர் பிரிவில் பங்கேற்றுள்ளார். இவர், கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நன்றாகப் படிக்கக் கூடிய, விளையாட்டில் திறமை வாய்ந்த சிறுவன் அருண்குமார் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொள்வதற்கு அவர் கஞ்சாவுக்கு அடிமையானதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று போதை வெறியில், தாயுடன் தகராறில் அருண்குமார் ஈடுபட்டுள்ளார். பிறகு வீட்டில் இருந்த பீரோ, டிவி, மின்விசிறி போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தாயையும் தாக்கத் தொடங்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதையடுத்தே அருண்குமார் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதையடுத்து அருண்குமார் கஞ்சா போதையால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவரது பெரியப்பா தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார்,  டி.என். பாளையத்தில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என உறுதியளித்துள்ளனர். அப்பகுதியில் அருண்குமார் மட்டுமின்றி  கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் பல சிறுவர்களையும் கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கி வைத்துள்ளார்கள் என்று அப்பகுதி வாசிகள் புலம்புகின்றனர்.