கஜா புயல் பாதிப்பு: 50 வீடுகள் கட்டித் தர ராகவா லாரன்ஸ் முடிவு!

 

கஜா புயல் பாதிப்பு: 50 வீடுகள் கட்டித் தர ராகவா லாரன்ஸ் முடிவு!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். டெல்டா பகுதியை சூறையாடிய கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் சுமார் 50 வீடுகள் கட்டித்தரப்படும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்..

எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்..

அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்..மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும்… அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள்

நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.. அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்..