கஜா புயல் பாதிப்பு: ரசிகர்கள் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பிய நடிகர் விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

கஜா புயல்  பாதிப்பு: ரசிகர்கள் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பிய நடிகர் விஜய்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு உணவு, தண்ணீர், மின்சாரம், வீடு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சோறுடைத்த சோழ நாடு என போற்றப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தற்போது சோற்றுக்கு வழி இல்லாமல் இருக்கிறது. இதனையடுத்து தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பலரும் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களை நிவாரண பொருள்களாகவும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது  நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நடிகர் விஜய் ரூ.70 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.