கஜா புயல்; நிதி இருந்தும் கொடுக்கமாட்றாங்க…. மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்

 

கஜா புயல்; நிதி இருந்தும் கொடுக்கமாட்றாங்க…. மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்

கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் போதிய நிதி இருந்தும் அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

மதுரை: கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் போதிய நிதி இருந்தும் அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக  தமிழக அரசு சார்பில் ரூ 15,000 கோடி மத்திய அரசிடம் கேட்டு முதற்கட்டமாக ரூ 1,500 கோடி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ 353.70 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இதுவரை மத்திய அரசு நிவாரண நிதியாக 5 பைசாக்கூட வழங்கவில்லை என கூறியிருந்தார்.

இதற்கிடையே தமிழகம் வந்த மத்திய குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. இதனையடுத்து மத்திய குழு தாக்கல் செய்யும் அறிக்கையை பொறுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உட்பட 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ம் தேதியே கொடுக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து 19-ம் தேதி பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசிடம் நிதி இருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் எனவும் இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.