கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரரின் மனிதாபிமானம்!!

 

கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரரின் மனிதாபிமானம்!!

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்

புதுக்கோட்டை: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையான சேதத்துக்கு உள்ளாகிச் சென்றுள்ளது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியும், தற்காலிகமாக ரூ.1500 கோடியும் ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, கஜா புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தனது வாடிக்கையாளர்களின் கடன்களை ரத்து செய்துள்ளார்.

புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்பச் செலுத்துமாறு அரசு, வங்கி அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், டீக்கடைக்காரரின் இந்த மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.