கஜா புயல்: இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

 

கஜா புயல்: இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

கஜா புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்

டெல்லி: கஜா புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலால் 12 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியும், தற்காலிகமாக ரூ.1500 கோடியும் ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பணிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகையை அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அதனடிப்படியில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.