கஜா நிவாரணம்: நடிகர் அஜித் ரூ.5 கோடி கொடுத்தாரா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் அஜித் ரூ.15 லட்சம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் ரூ.5 கோடி கொடுத்ததாக வரும் தகவல் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் அஜித் ரூ.15 லட்சம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் ரூ.5 கோடி கொடுத்ததாக வரும் தகவல் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த நவ.15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கஜா புயலினால் வீடு, வயல், கால்நடைகளை இழந்து தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களுக்காக அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.
‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு தக்ஷா குழுவுடன் இணைந்து ஏர் ஆம்புலன்ஸ் ஆய்வில் ஆர்வம் காட்டிய அஜித், கஜா புயல் பாதிப்பு குறித்து அக்கறை காட்டவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், நடிகர் அஜித்குமார், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கியதாக செய்திகள் வெளியாகின.
பொதுவாக தான் செய்யும் எந்த ஒரு நற்செயலையும் விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் நடிகர் அஜித். அப்படியிருக்க கஜா புயல் பாதிப்புக்கு அவர் அளித்த நிவாரணம் குறித்து விநியோகஸ்தர் 7ஜி சிவா முக்கியமான தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
7G Shiva said earlier today that #ThalaAjith donated a whopping 5 CR for #GajaCycloneRelief, and not 15 lakhs as announced earlier.. Amazing sir ?? #GajaCyclone #Thala #Ajith pic.twitter.com/BrL2HBKI9W
— Kaushik LM (@LMKMovieManiac) December 2, 2018
இது தொடர்பாக பேசிய 7ஜி சிவா, ‘அனைவருமே அஜித் சார் ரூ.15 லட்சம் கொடுத்தார் என நினைக்கிறார்கள், உண்மையில் அவர் ரூ. 5 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாதது அவருடைய கேரக்டர். அவருடன் நெருக்கமாக பழகியதால், இது எனக்கு தெரியும். எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்’ என்று 7ஜி சிவா பேசியுள்ளார்.
7ஜி சிவா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர், கஜா புயலுக்கு அஜித் கொடுத்த தொகை எவ்வளவு, உண்மையில் அவர் ரூ.5 கோடி தான் கொடுத்தாரா என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர்.