கஜாவை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

 

கஜாவை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

கஜா புயலை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர்: கஜா புயலை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தஞ்சையில், கஜா புயலால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் டெல்டா மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி, அதன் பிறகு தானே, வர்தா, ஓகி புயல்கள், வெள்ளம் என தொடர்ந்து வந்த இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு இவற்றின் சுவடே இல்லாத வகையில் மாற்றினோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது எப்படி பணியாற்றினாமோ, அதேபோல்தான் கஜா புயல் பாதிப்புகளை அகற்ற தற்போதும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் 2,437 குடும்பங்களை சேர்ந்த 10,592 பேர் 55 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் இருந்த மரங்களை அகற்றி வருவதுடன், போக்குவரத்தையும் சீர் செய்து வருகிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் 4,458 மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகரப்பகுதியில் 100% கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் 83%, 22 பேரூராட்சிகளில் 96% மீதமுள்ள கிராமப்புற பகுதிகளில் 61% மின் வினியோகம் வழங்கப்படுகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழுமையாக மின்வினியோகம் செய்யப்படும்.

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெறப்பட்டு வருகிறது. 1,843 கால்நடைகள், 1,58,458 கோழிகள் உயிரிழந்துள்ளன. 71,877 குடிசை வீடுகள், 50,074 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 14, 856 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.  கஜா புயலை வைத்து தமிழகத்தில், ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வெறும் வாயால் பேசினால் மட்டும் போதாது, செயல்பட வேண்டும். நாங்கள் தான் களத்தில் கடமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உணவளித்து வருகிறோம். தஞ்சை மாவட்டம் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் பட்டினி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.