ஓடும் பேருந்தில் பேனாக்கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்ட பெண்: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிலாளர் இல்லம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம். இவருடைய மனைவி அகல்யா. இவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருந்த நிலையில், காயத்ரி வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை கடந்த ஏழு ஆண்டுகளுக்குமுன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த சந்தானம் மகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று பிடிவாதமாக இருக்க சில ஆண்டுகளில் அகல்யா மனம் மாறி மகளுடன் பேசி வந்துள்ளார். இருப்பினும் கணவருக்குப் பிடிக்காததால் மகளை தானும் ஒதுக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பகுதியை கடந்துள்ளார். அப்போது திடீரென்று கையில் வைத்திருந்த பேனா கத்தியைக் கொண்டு கழுத்தை அறுத்துக்கொண்டார் அகல்யா. இதனால் ரத்தம் பீறிட்டது. இதை கண்டு பேருந்திலிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அகல்யா மேல் சிகிச்சைக்காகச் சேலம் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கருமலைக் கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.