ஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து!

 

ஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு தீயில் கருகிய அப்பாவி மக்கள்: உலகையே அதிரவைத்த கோர விபத்து!

மெக்சிகோவின் முக்கிய பகுதியில் பெட்ரோல் குழாய் வெடித்துச் சிதறிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிடல்கோ: மெக்சிகோவின் முக்கிய பகுதியில் பெட்ரோல் குழாய் வெடித்துச் சிதறிய சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மெக்சிகோவின் ஹிடல்கோ நகரில் கடந்த வெள்ளிக் கிழமையன்று பெட்ரோல் கொண்டு செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து பெட்ரோல் கசிவதாக அருகில் உள்ள கிராமங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து, இலவசமாக பெட்ரோல் கிடைக்கும் என்ற ஆசையில், தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களுடன் புறப்பட்ட மக்கள், குழாய்க்கு அருகே நின்று பெட்ரோலை சேமித்துள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில், குழாய்க்கு அருகே இருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதிலும் பலர் உடலில் தீ பிடித்த நிலையில், தெறித்து ஓடி கீழே விழுந்தனர். 

இது அனைத்தையும் அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் தற்போது வரை 73 பேர் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக ஹிடல்கோ நகர ஆளுநர் ஒமர் ஃபயட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், இந்த விபத்து துளையிட்டு திருடும் போது நிகழ்ந்ததா? அல்லது குழாயில் தானாக ஏற்பட்ட விரிசலா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.