ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

 

ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய இணைப்புகள்: தொலைத்தொடர்பு துறையில் போட்டி நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும் ஜியோ

2019 ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் 85 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. அதேசமயம் அந்த மாதத்தில் இத்துறையில் உள்ள பழைய நிறுவனங்கள் சுமார் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு வளர்ச்சியை ஜியோவின் வருகைக்கு முன், வருகைக்கு பின் என இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். 2016ல் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் வாயிலாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் களம் இறங்கினார். இலவச வாய்ஸ், குறைந்த டேட்டா கட்டணம் என பல அதிரடி சலுகைகளால் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்தது.

முகேஷ் அம்பானி

ஜியோவின் வருகையால் சிறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன. தற்போது பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ளன. அந்த நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை ஜியோவிடம் இழந்து வருவதாக தெரிகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் 85 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கியது. அதேசமயம் அந்த மாதத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒட்டு மொத்தத்தில் 60 லட்சம் இணைப்புகளை இழந்துள்ளன.

பி.எஸ்.என்.எல்.

இதை நிலைமை நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் இந்திய தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கு போட்டியாளர்களே இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை இறுதி நிலவரப்படி நம் நாட்டில் மொத்தம் 118.92 கோடி தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இணைப்புகளின் எண்ணிக்கை 118.66 கோடியாக இருந்தது.