ஒரே மாசத்துல ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி

 

ஒரே மாசத்துல ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்கள் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நம் நாட்டில் தங்கம் உற்பத்தி பெயரளவுக்குதான் நடைபெறுகிறது. அதனால் தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதியால் அன்னிய செலாவணி பெரிய அளவில் வெளியே செல்கிறது. இதனால் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், தங்க பத்திரம், தங்க டெபாசிட் போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனாலும் தங்கம் இறக்குமதி ஒரு மாதம் குறைந்தால் அடுத்த மாதம் உயர்ந்து விடுகிறது.

ஏற்றுமதி, இறக்குமதி

கடந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 6.05 சதவீதம் குறைந்து 2,613 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. அதேசமயம் இறக்குமதியும் 13.45 சதவீதம் சரிந்து 3,958 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் தங்கம் மட்டும் 136 கோடி டாலருக்கு (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி இறக்குமதி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 1,345 கோடி டாலராக குறைந்தது. இந்த நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் இந்தியா 13,354 கோடி டாலருக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. அதேசமயம், 20,639 கோடி டாலருக்கு சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இதனையடுத்து வர்த்தக பற்றாக்குறை 7,285 கோடி டாலராக உள்ளது.