ஒரு இந்தியனாக காஷ்மீர் விவகாரத்தில் பெருமை கொள்ளமுடியவில்லை – அமர்தியா சென்!

 

ஒரு இந்தியனாக காஷ்மீர் விவகாரத்தில் பெருமை கொள்ளமுடியவில்லை – அமர்தியா சென்!

உயிர் இழப்பையும் பொருளாதார இழப்பையும் தடுப்பதாகக் கூறி, போராட்டத்தை அடக்கும் விதமாக தொடர்ந்து மாநிலத்தை மிகப்பெரும் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பது ‘காலனித்துவ சாக்கு’ எனவும் இப்படித்தான் பிரிட்டீஷார் 200 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார்கள் எனவும் அமர்தியா சென் கடுமையாக சாடியுள்ளார்.

காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக திமுக தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் டெல்லியில் நடத்தும் போராட்டம் குறித்து சமூகவலைதளங்களில் ஏளனங்கள் ஏகபோகமாக கிடைக்கப்பெறுகின்றன. ஆனால், இன்று இந்தியா காஷ்மீரில் என்ன செய்ததோ, அதனையேதான் இங்கிலாந்து 200 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செய்தது என்ற உண்மையை சாதாரணன் சொன்னால் மத்திய அரசுக்கு உரைக்காது, ஆனால், அமர்தியா சென் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் சொன்னாலாவாது உரைக்குமா? உயிர் இழப்பையும் பொருளாதார இழப்பையும் தடுப்பதாகக் கூறி, போராட்டத்தை அடக்கும் விதமாக தொடர்ந்து மாநிலத்தை மிகப்பெரும் கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பது ‘காலனித்துவ சாக்கு’ எனவும் இப்படித்தான் பிரிட்டீஷார் 200 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார்கள் எனவும் அமர்தியா சென் கடுமையாக சாடியுள்ளார்.
 

Kashmir after 370 revocation

என்.டி.டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் அமர்தியா சென் கூறியிருப்பதாவது “காஷ்மீரில் ஜனநாயகம் இல்லாத எந்தவொரு தீர்மானமும் பலனைத் தரும் என நான் நினைக்கவில்லை, பெரும்பான்மை பலத்தால் எடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு, அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் பேணத் தவறிவிட்டது, ஜனநாயக நெறிக்காக இவ்வளவு சாதனைகளைச் செய்த, ஜனநாயகத்தை அமலாக்கிய மேற்கத்திய நாடல்லாத முதல் நாடு என்ற பெருமை கொண்டது இந்தியா. இப்போது ஒரு இந்தியராக, இந்தியாவின் நடவடிக்கையில் நான் பெருமை கொள்ளவில்லை. இந்தியாவின் அடிப்படை நற்பெயரை கெடுப்பதாக இந்த நடவடிக்கை இருக்கிறது” என குறைபட்டுக்கொண்டுள்ளார். காஷ்மீரிகள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குத்தான் சட்டரீதியான உரிமை உள்ளது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.