ஒருத்தர வெறுக்கலாம், ஆனா கிண்டல் பண்ண கூடாது: பிக் பாஸ் குறித்து ரசிகர்களுக்கு மெசேஜ் சொன்ன ஓவியா!?
மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள் என்று நடிகை ஓவியா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள் என்று நடிகை ஓவியா கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. வளரும் நடிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகவும், இன்னும் சிலர் பிக் பாஸ் என்ற பெயரைக் கேட்டாலே தெறித்து ஓடுவதாகவும் தினம்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்ற நடிகை ஓவியா இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘ நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள். தவறு செய்வது இயல்பு. முழுமையான நல்லவர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை. ஒருவரை வெறுப்பதற்கும் கிண்டல் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நான் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ஓவியாவின் இந்த யதார்த்தமான பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.