ஒடிசாவைப் புரட்டி போட்ட ஃபனி புயல்: ‘பெண்களை தூக்கி வீசும்’ பதற வைக்கும் வீடியோ!
ஒடிசா: ஒடிசாவைப் புரட்டிப் போட்ட ஃபனி புயலால் 8 பேர் உயிரிழந்ததோடு ஏராளமான வீடுகளும் புயலுக்கு இறையாகியுள்ளன.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் அதிதீவிர புயலாக , நேற்று காலை முதல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியது. நேற்று காலை அது கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் காலை சுமார் 8.30 மணியளவில் புரி கடற்கரையை எட்டியது. இதனால் நண்பகல் வரை கோரத் தாண்டவமாடிய இந்த புயல் ஒடிசாவின் பல பகுதிகளைச் சூறையாடிச் சென்றது. 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதில் செல்போன் கோபுரங்கள், மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக ஹவுரா – சென்னை ரயில் உள்ளிட்ட 220 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் புவனேஸ்வர் விமான நிலையத்திலிருந்து புறப்படும் 10 விமானங்களும், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து புவனேஸ்வர் செல்லும் 9 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.புயல் பாதிப்பால் 8 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புயலின் கோரத்தாண்டவத்தின் வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வீடுகளின் மேற்கூரைகள், ஜன்னல்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பெயர்த்து கொண்டு போகிறது. ராட்சத செல்போன் டவர் ஒன்று சாய்ந்து விழுவது போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
Brave girls try to close the door for their safety…#fani #cyclone @CNN @PMOIndia @CMO_Odisha pic.twitter.com/VhETR5Mbyo
— Naba Krushna (@nabina4ugmailc2) May 3, 2019
இதில் குறிப்பாக ஒடிசாவில் பெண்கள் சேர்ந்து தங்கள் இருப்பிடத்தின் கதவை மூட முயல்கின்றனர். ஆனாலும் ஃபானி புயலின் தீவிரத்தன்மையை சமாளிக்க முடியவில்லை.இருப்பினும் அத்தனை பேரும் சேர்ந்து அந்த கதவை ஒருவழியாக மூடிவிடுகின்றனர். ஆனால் அத்தனை பேரையும் ஒரு நொடியில் ஃபனி புயல் தூக்கி வீசுகிறது. இதில் பெண்கள் அனைவரும் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். இந்த வீடியோ பார்ப்பவரைக் கதிகலங்க வைத்துள்ளது.