‘ஐபிஎஸ் சஜ்ஜனாருக்கு என்கவுண்டர் புதுசு இல்ல’.. 2008-லேயே ஆசிட் வீச்சுக்கு என்கவுண்டர் செய்த துணிச்சல் அதிகாரி!
ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர்கள் தப்பியோட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த என்கவுண்டரில் 3 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பிரியங்கா ரெட்டி கொலை வழக்கை விசாரிக்க தெலங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்த நிலையில் விசாரணைக்கு முன்பாகவே இவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதனால் இந்த அதிரடி செயலில் ஈடுபட்ட சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆணையர் சஜ்ஜனார் ஏற்கெனவே 2008-ல் வாரங்கல் எஸ்.பி.யாக இருந்தபோது ஒரு தலை காதலால் வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 குற்றவாளிகளை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.
அப்போது அவர்கள் தப்பித்து ஓட முயன்ற போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தற்போது அதேபோல் மீண்டும் ஒரு என்கவுண்டர் நிகழ்வு இந்த ‘ என்கவுண்டர் போலீஸ்’ தலைமையில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.