ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்கும் : ராமதாஸ்

 

ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்கும் : ராமதாஸ்

போலந்தில் நடைபெறும் ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை: போலந்தில் நடைபெறும் ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP24 – UN Climate Change Conference 2018) என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலர் இர.அருள் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.

நிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து, அதனால் பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்வதற்கான ஐநா காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை (UNFCCC – United Nations Framework Convention on Climate Change) மூலம் 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை எட்டப்பட்டது.

அதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெகு கீழாக குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. பாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும். இதற்கான ஐநா காலநிலை மாநாடு  போலந்தின் கடோவைஸ் நகரில் டிசம்பர் 2ம் தேதி தொடங்கியுள்ளது. 14ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், 190 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பு கலந்துகொள்கிறது.‘உலகை காப்பாற்ற வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என 2018 அக்டோபர் மாதம் தென் கொரியாவில் வெளியிடப்பட்ட, ஐநா காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக்குழுவின் அறிக்கை (IPCC  Special Report on 1.5º C) கேட்டுக்கொண்டுள்ள சூழலில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தாகும்.

உலகம் அழியாமல் காப்பாற்ற மிகவும் குறுகிய கால அவகாசமே உள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் மிக வேகமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாடு ஆண்டுக்காண்டு அதிகமாகி செல்வதற்கு 2020 ஆம் ஆண்டில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பின்னர் 2030 ஆம் ஆண்டுக்குள் இவற்றின் பயன்பாட்டை பாதியளவுக்கு கீழாக மிக வேகமாக குறைக்க வேண்டும். 2050 ஆண்டில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் பத்தாண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பலநூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’என்று ஐநா அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபேறும் ஐநா காலநிலை மாநாட்டில் உலகநாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும் என கூறியுள்ளார்.