ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கும் சிவகார்த்திகேயன்!

 

ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவப் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவப் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் 1-ம் தேதி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இத்தேர்வானது கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது.  சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதியான  இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தலை முன்னிட்டு தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரமே முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி  பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது

இந்தத் தேர்விலும் வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் அளவில் அதிகம் தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானா 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால்  மேற்படிப்பு படிப்பு அவருக்கு வசதி இல்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இந்தச் செய்தியை அந்த மாணவியின் ஆசிரியரான செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து, நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.
#ஊக்கமது_கைவிடேல்’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தி இயக்குநர் சரவணன் மூலம் நடிகர் சிவகார்திகேயனின் காதுக்கு எட்ட, அவர்  மாணவியின்  மருத்துவப்படிப்பிற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.  

மேலும் மாணவியின் சாதனையை பாராட்டியுள்ள இயக்குநர்  நவீன், ‘வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்லான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே’ என்று  குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் அனிருத்! பின்னணி என்ன?