ஏன் சிவன் சொத்து குல நாசம் என்கிறோம்?

 

ஏன் சிவன் சொத்து குல நாசம் என்கிறோம்?

எமலோகத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த எமதர்மர், தனது தூதர்களை அழைத்தார்.

எமலோகத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்த எமதர்மர், தனது தூதர்களை அழைத்தார். ‘இந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட மனிதனின் இறுதிகணம் இன்று  முடியப் போகிறது. நீங்கள் சென்று அவனை அழைத்து வாருங்கள். ஆனால் இம்முறை உங்களை நான் சோதிக்க போகிறேன். நீங்கள் செல்லும் இடத்தில் ஒரே மாதிரியாக இரண்டு பேர் இருப்பார்கள். இதில் ஒருவன் கலியுகம் போற்றவும், மற்றொருவன் கலியுகம் தூற்றவும் வாழ்ந்துக் கொண்டிருப்பான். எனக்கு கெடுதல் புரிபவனின் உயிர் தான் வேண்டும்’ என்றார்.

sivan

எமதர்மரின் சொல்படி தூதர்களும் பூலோகம் வந்தனர். எமதர்மர் குறிப்பிட்டு சொன்ன அந்த இருவரையும் கண்காணித்தார்கள். ஒருவன் தினமும்  சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டு ஆலய பணிகளில் ஈடுபட்டு பக்தியுடன் இருந்தான். மற்றொருவன்   கள்ளம், கபடு, திருடு, பொய் பித்தலாட்டம் என்று இருக்கும் அத்தனை தீயவழிகளையும் தன் குணமாக்கி வாழ்ந்து வந்தான். அவனது தோற்றமும், வாழும் முறைகளும் அருகிலிருந்த மக்களை வெறுப்படைய செய்தது. தூதர்கள் இருவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து குறிப்பிட்ட நேரம் வந்ததும் சிவாலயத்துக்குள்  பணியில் இருந்தவனை  பாசக்கயிறு போட்டு இழுத்து  சொர்க்கவாசல் வழியைத் தவிர்த்து நரகத்துக்குள் இழுத்துச் சென்றனர்.
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த எமதர்மர்  ‘என்ன செய்கிறீர்கள் தூதர்களே? நல்லவனை மாற்றி அழைத்து வந்ததோடு அவனை நரகலோலத்துக்குள் பிரவேசிக்க செய்துவிட்டீர்களே?’ என்று கோபம் கொண்டார்.  

‘இல்லை எமதர்மரே.. இவன்  சிவாலயங்களில் சேவை செய்வதாக சொல்லி அங்கிருக்கும் பொருள்களை யாரும் அறியாமல் களவாடி சமூகத்தில்  நல்ல முறையில் நல்ல பெயர் பெற்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். கேட்பவர்களுக்கு உதவி செய்தாலும்  இறைவனுக்குரியதை எடுத்து அனுபவித்து அதையே உதவி என்று பொய் முகம் காட்டி மக்களை ஏமாற்றி இறைவனையும் ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இன்னொருவன் மக்களிடம் கொள்ளையடிக்கிறான். அவனுக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை. ஆனால் இவனுக்கு நன்மை எது தீமை எது என அனைத்தும் தெரிந்திருக்கிறது. இருந்தும் இவன் படைத்த இறைவனிடமே  பசுத் தோல் போர்த்திய புலியாய் நல்லவனாய நடித்து நாடகமாடிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் இவனை அழைத்து வந்தோம். இவனுடைய குடும்பத்தினரும் இவனது வம்சமும் இனி நல்லதை நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கையில் கவலையும், அச்சமும், தரித்தரமும் சூழவே அவர்கள் இறுதிக் காலம் வரை கழிக்க வேண்டும். மரணத்தைக் கூட அகால மரணமாக தான் பெறமுடியும்” என்றனர்.
புன்னகைத்த எமதர்மர், என்னுடைய தூதர்கள் எப்போதும் தரும வழியிலேயே செல்வார்கள்  என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் என்றார். இதனால் தான் சிவன் சொத்து குலநாசம் என்று சொல்கிறோம்.