எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

 

எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி. பரிசோதனை, சிகிச்சை மற்றும் எச்.ஐ.வி. தடுப்புப் பற்றி ‘‘உங்கள் நிலையை அறியவும்’’ இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக் கருத்து ஆகும்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் எச்.ஐ.வி. பரிசோதனை சிகிச்சையை விரிவுபடுத்துவதற்கும், தமிழகமெங்கும் எச்.ஐ.வி. தொற்றைகண்டறிய 2561 நம்பிக்கை மையங்களும், 15 நடமாடும் நம்பிக்கை மையங்களும் மற்றும் 2 நடமாடும் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாகனங்களும் செயல்பட்டு வருகின்றன.

அத்துடன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 194 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.மேலும், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் எச்.ஐ.வி. தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில், எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குதல், சூரிய ஒளி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டு, அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் அக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி.-எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.