எம்.பி.யான கருணாஸ் பட நாயகி: பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு!?
மக்களவை தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகையும் எம்.பி.யுமான நவ்நீத் கவுர் பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
மும்பை: மக்களவை தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகையும் எம்.பி.யுமான நவ்நீத் கவுர் பிரதமர் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
நடிகை நவ்நீத் கவுர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுயேச்சை எம்.எல்.ஏ ரவி ராணாவை நவ்நீத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணத்திற்குப் பிறகு ரவி ராணா யுவா ஸ்வாபிமான் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் நவ்நீத் கவுர் அமராவதி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனா கட்சியின் வேட்பாளர் ஆனந்த்ராவ்வை காட்டிலும் 36,951 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று எம்பியாக தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நவ்நீத் கவுர் மும்பையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் இதுவரை அரசியலில் கணவருக்கு உதவியாக இருந்தேன். தற்போது நானும் அரசியலில் தீவிரமாக பணியாற்றவுள்ளேன். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் பலர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் புதிய பார்வையுடன் செயல்படுவார்கள்’ என்றார்.