என் மகள் திருமணத்துக்கு யார் யாருக்கு பத்திரிகை கொடுப்பேன்? – ரஜினி விளக்கம்

 

என் மகள் திருமணத்துக்கு யார் யாருக்கு பத்திரிகை கொடுப்பேன்? – ரஜினி விளக்கம்

தனது மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு யார் யாருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்

சென்னை: தனது மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு யார் யாருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா கடந்த 2010-ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  தேவ் என்ற மகனும் இருக்கிறார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர்.

தொடர்ந்து, சவுந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார். சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் வருகிற 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், சினிமா நட்சத்திரங்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நடிகர் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களுக்கு நேரில் சென்று பத்திரிகை கொடுத்து வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் எனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறேன் என்றார்.