என் பேரனே… சுர்ஜித்… நீ மிகப்பெரும் ஆத்மா! – நடிகர் ராஜ்கிரண்

 

என் பேரனே… சுர்ஜித்… நீ மிகப்பெரும் ஆத்மா! – நடிகர் ராஜ்கிரண்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு மத்தியில் நேற்றிரவு 2.30 மணியளவில் சுஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்குப் பிறகு  இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Sujith

இந்நிலையில் சுர்ஜித்தின் இறப்பு குறித்து நடிகர் ராஜ்கிரண் முகநூலில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். “என் பேரனே… சுர்ஜித்…

உனக்காக எவ்வளவு எவ்வளவு பிரார்த்தனைகள்…

கோவில்களிலும்,
மசூதிகளிலும்,
தேவாலயங்களிலும்…

கடவுள் இல்லையென்று
எண்ணியவர்கள் கூட,
இயற்கையிடம்
அழுது மன்றாடினார்களே…

தமிழகம் மட்டுமல்லாமல்,
உலகமே உனக்காக
கண்ணீர் விட்டு கதறிக்கதறி
பிரார்த்தனை செய்ததே…

எங்கள் பிரார்த்தனைகள் என்னவானது
என்று எங்களுக்குத்தெரியவில்லை…

ஆனால், ஒன்று மட்டும் எனக்குப்புரிகிறது…

நீ மிகப்பெரும் ஆத்மா.

இறைவனிடம்,
இரண்டரை ஆண்டுகள் மட்டுமே
பூமியில் இருக்க, வரம் வாங்கி
வந்திருக்கிறாய்…

அதன் காரணம் தான் புரியவில்லை…

நான் தமிழன்,
நான் இந்தியன் என்று
மார்தட்டிக்கொள்வது,
வெறும் வெற்றுக்கூச்சல் என்பதை,
எங்களுக்கு உணர வைக்கவா…

நான் இந்து, நான் இஸ்லாமியன்,
நான் கிருஸ்துவன் என்ற போலிப்பெருமைகளிலிருந்து மீண்டு,

“அன்பும், மனித நேயமும், சத்தியமுமே
இறைவன் விரும்பும் மதம்” என்று
எங்களுக்கு புரிய வைக்கவா…

இறையடி சேர்ந்துவிட்ட என் பேரனே,
உன் பிறப்பின் நோக்கம் நிறைவேற,
இன்று உன் பெயரால் உறுதியேற்கிறேன்…
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்…” என பதிவிட்டுள்ளார்.