என்னை கமல் நேர்காணலுக்கு அழைத்த காரணம் இது தான்: கோவை சரளா ஆவேசம்!
வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாகக் கோவை சரளா தெரிவித்துள்ளார்
சென்னை: வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், கமல்ஹாசன் தன்னை நேர்காணல் செய்ய அழைத்ததாகக் கோவை சரளா தெரிவித்துள்ளார்
மக்களவை தேர்தல்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீட்டையும், வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.
தீவிர களப்பணி
அந்த வகையில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றி வரும் கமல்ஹாசன், வருகின்ற மக்களவை தேர்தலில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் நேர்காணலும் நடைபெற்று வருகிறது.
கட்சியிலிருந்து விலகிய குமரவேல்
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளர் சி.கே குமரவேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது குறித்து குமரவேல் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது,’கட்சியில் சேர்த்த ஒருவாரத்தில் கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியதை ஏற்க முடியாது. கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என விமர்சித்தார்.
கோவை சரளா ஆவேசம்!
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், குமரவேல் கூறுவது போல நான் கட்சிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது. அதனால் எனக்கு அரசியல் தெரியாது. ஒன்னுமே தெரியாது. ஒரு முட்டாளை கொண்டு வந்து கமல்ஹாசன் வைத்துள்ளார் என அவர் சொல்கிறாரா? அவர் நேரடியாக என்னிடம் சொல்லட்டும். நான் அவருக்கு பதில் சொல்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில், கமல்ஹாசன் என்னை நேர்காணலுக்கு அழைத்தார். நான் மட்டுமல்ல இன்னும் பல பேர் இருந்தார்கள். அரசியலில் சம்பந்தமில்லாதவர்களும் இருந்தார்கள். ஆனால் அவருக்கு அதெல்லாம் தெரியவில்லை, நான் மட்டும் தான் தெரிந்திருக்கிறேன்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.