எனது பேச்சை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன: ஷாகித் அஃப்ரிடி
காஷ்மீர் குறித்த எனது கருத்தை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்: காஷ்மீர் குறித்த எனது கருத்தை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அஃப்ரிடி இங்கிலாந்தில் மாணவர்கள் நாடாளுமன்றத்தில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், என்னைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் தேவையில்லை. அதேநேரத்தில் காஷ்மீரை இந்தியாவுக்கும் தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மனிதமாவது உயிருடன் இருக்கட்டும். நிச்சயமாகப் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. இங்கு இருக்கும் 4 மாகாணங்களையே பாகிஸ்தானால் முறையாகப் பராமரிக்க முடியவில்லை. எந்த சமூகத்தில் மரணம் நிகழ்ந்தாலும் அது வலி தரக்கூடியதுதான் என பேசியிருந்தார். அஃப்ரிடியின் பேசும் இந்த வீடியோ பாகிஸ்தானில் பெரும் புயலை கிளப்பியது. மேலும் அவருக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
My comments are being misconstrued by Indian media! I’m passionate about my country and greatly value the struggles of Kashmiris. Humanity must prevail and they should get their rights.
— Shahid Afridi (@SAfridiOfficial) November 14, 2018
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அஃப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துகளை இந்திய ஊடகங்கள் தவறுதலாக, திரித்து வெளியிட்டுள்ளன. என்னுடைய நாட்டின் மீது மிகுந்த பற்றும், அபிமானமும் கொண்டவன். மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அதேசமயம், போராடி வரும் காஷ்மீர் மக்களின் போராட்டத்தையும் நான் மதிக்கிறேன். அனைத்து இடங்களிலும் மனிதநேயம் காக்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
My clip is incomplete & out of context as what I said before that is missing.Kashmir is unresolved dispute & under brutal Indian occupation. It must be resolved as per UN resolution. Myself along with every Pakistani support Kashmiri freedom struggle. Kashmir belongs to Pakistan.
— Shahid Afridi (@SAfridiOfficial) November 14, 2018
இதேபோல் மற்றொரு ட்வீட்டில், நான் பேசிய பேச்சின் முழுமையான வீடியோ விவரங்கள் வெளியாகவில்லை, தேவையானவற்றை மட்டும் வெளியிட்டுள்ளனர். நான் பேசியதாகக் கூறப்படும் காட்சிக்கு முன் என்ன பேசினேன் என்பது அதில் இல்லை. என்னைப் பொறுத்தவரை காஷ்மீர் தீர்க்கப்படாத பிரச்னைக்குரிய பகுதியாகும். காஷ்மீரை இந்தியா காட்டுமிராண்டித்தனமாக ஆக்கிரமித்துள்ளது. ஐ.நா. சபை தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினை கண்டிப்பாகத் தீர்க்கப்பட வேண்டும். காஷ்மீர் விடுதலைக்காக நான் மட்டுமல்ல ஒவ்வொரு பாகிஸ்தானியர்களும் ஆதரவு அளிப்பார்கள். காஷ்மீர் எப்போதும் பாகிஸ்தானைச் சேர்ந்ததுதான் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.