எனக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை: ஹெச்.ராஜா முறையீடு

 

எனக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை: ஹெச்.ராஜா முறையீடு

என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்துள்ளார்

சென்னை: என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் மெய்யபுரம் கிராமத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒருசில வழித்தடங்களில் ஊர்வலம் செல்ல தடை இருப்பதை சுட்டிக்காட்டிய காவல்துறையினரிடம் ராஜா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக அவர் விமர்சித்தார்.

இதனையடுத்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அது என்னுடைய குரலே இல்லை என ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும், அவர் உட்பட 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய 10 பேர் கொண்ட 2 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதால் என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை. நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது. தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் என தலைமை நீதிபதி பதில் அளித்துள்ளார்.