எந்திரத்துக்குள் சிக்கிய தலை.. வட மாநில இளைஞருக்கு நேர்ந்த சோகம் !
உத்திரமேரூரில் உள்ள புல்லம்பாக்கம் கிராமத்தில் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
உத்திரமேரூரில் உள்ள புல்லம்பாக்கம் கிராமத்தில் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான நிகாபிரதான் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் இருந்து இங்கு வந்து, தங்கி பணியாற்றி வருகிறாராம். அந்த நிறுவனத்தில் நிகாபிரதான் எந்திர இயக்குபவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல பணிக்குத் திரும்பிய இவர் எந்திரத்தை ஆபரேட் செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென இவரது தலை எந்திரத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரை மீட்க முடியாததால் நிகாபிரதான் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், எந்திரத்தில் கோளாறு இருந்ததா? அல்லது நிகாபிரதான் கவனமாகச் செயல்படவில்லையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.