எடப்பாடியார் பேரவை போஸ்டரை ஒட்டியதே ஓபிஎஸ் ஆதரவாளர் தான்: ஜக்கையன் பரபரப்பு தகவல்!
தேனி மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை போஸ்டர்களை ஒட்டியது ஓபிஎஸின் ஆதரவாளர் தான் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தெரிவித்துள்ளார்.
கம்பம்: தேனி மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை போஸ்டர்களை ஒட்டியது ஓபிஎஸின் ஆதரவாளர் தான் என்று சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ள அனைத்துப் பகுதிகளிலும் எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் கேம்.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கம்பத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜக்கையன், ‘நான் அரசு விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் கடந்த இரண்டு வருடமாகவே அனைத்து அரசு விழாவிலும் கலந்து கொண்டு தான் வருகிறேன். சமீபத்தில் ஒரு விழாவுக்கு மட்டும் போக வில்லை. அதுவும் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் போக முடிய வில்லை. இங்குள்ள புதுப்பட்டியில் தங்கிக் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நூறு தடவை போய் மக்கள் பணியாற்றி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதையடுத்து எடப்பாடியார் பேரவை போஸ்டர் குறித்து கேள்வி எழுப்பியுள்ள போது, ‘அவர் என்னுடைய ஆதரவாளர் இல்லை, ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருடன் இருந்த பால் பாண்டியன் தான் அப்படிச் செய்திருக்கிறாரே தவிர எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லோரும் ஒரே அணியாகத் தான் செயல்பட்டு வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.