எடப்பாடிக்கு அவ்வளவு அதிர்ஷ்டமா..? பரிதாபத்தில் மு.க.ஸ்டாலின்..!

 

எடப்பாடிக்கு அவ்வளவு அதிர்ஷ்டமா..? பரிதாபத்தில் மு.க.ஸ்டாலின்..!

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல் இது. புது வரவுகளான கமல் ஹாசன், ரஜினி ஆகியோரும்  களத்தில் இறங்கி கம்பு சுத்தப்போவதால் நிலவரம் கலவரமாகவே இருக்கும்.

2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது திமு.க.வா? அதிமுகவா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தல் இது. புது வரவுகளான கமல் ஹாசன், ரஜினி ஆகியோரும்  களத்தில் இறங்கி கம்பு சுத்தப்போவதால் நிலவரம் கலவரமாகவே இருக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த தேர்தல் அதிமுக- திமுக- ரஜினி என்கிற மும்முனைப்போட்டியால் அக்னிப்பரீட்சையாகவே அமையக் கூடும். 

stalin

இந்நிலையில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது ஸ்டாலினா? எடப்பாடியா? என்கிற விவாதம் வலுத்து வருகிறது. இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.  

’’மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு  வந்தால் மது விற்பனை கூடலாம். அப்படியே நாட்டில் களவும் பெருகலாம். மழை பொழிவது குறைந்து போகும் என்ற நம்பிக்கை பொய்க்காது என்று மக்கள் எண்ணினால் ஓட்டுக்கு வேட்டு தான் இருக்கும். நன்கு தங்களை நிலை நிறுத்தி கொண்ட பழைய அரசியல் தலைவர்களின் குடும்பங்களே அரசியலில் பெரும்பதவிக்கு வரும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. 

மிக முக்கியமாக இந்துமதம் மட்டும் தவறானது, இந்து கடவுள்கள் மட்டுமே தவறு என்று கூறிக்கொண்டு மைனாரிட்டி மக்களின் ஓட்டுக்களை குறிவைப்பதால் இன்று பெரும்பாலான மக்கள் ஸ்டாலினை வெறுத்து வருகிறார்கள்.  வாரிசு அரசியல் தொடர்வது, கொள்கைகளை நேரத்திற்கு தகுந்தவாறு மாற்றி கொள்வது, மற்ற மதத்தினரை இந்துகளுக்கு எதிரான எண்ணத்தை ஏற்படுத்துவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

edappadi 

 நிறைய பணம் செலவு செய்து தான் வெற்றியை பெறவேண்டும் என்ற நிலைக்கு கட்சியின் தலைவர்கள் இன்று மாறி விட்டார்கள். அது வரும் தேர்தலில் முடியுமா? தங்களின் வாரிசுகளை வெற்றி பெற செய்வதற்கு மட்டும் தான் பணத்தை வாரி இறைப்பார்கள் என்பது கடந்த  மக்களவை தேர்தல் உணர்த்தி விட்டது. 

எதிர்க்கட்சியாக இருப்பவர்களுக்கு பல சவுகரியங்கள் உண்டு. ஆளும் அரசு அதை செய்யவில்லை. இது தவறு. அதை இன்னும் சிறப்பாக செய்யலாமே என்று தாராளமாக விமர்சிக்க முடியும். மக்களின் பிரச்சினைக்காக அதிகாரிகளை கேள்வி கேட்கலாம். மக்களுக்காக வேண்டிய வசதிகளை செய்து தர செய்ய வைத்து அதன் மூலம் வெற்றியை தேடவேண்டும். வெறும் மைக்கிற்கு முன்னாள் பேசுவதும், வெற்றுப்போராட்டங்கள் நடத்துவதும் வெற்றியை தேடி தராது அல்லவா?’’ என்கிறார் சமத்துவமக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகி. 

’’அதிமுக- திமுக இரு தரப்புமே ஊழலில் சளைத்தவர்களில்லை. ஆனால், ஊழலை கண்டுபிடித்து, அதை விஞ்ஞான முறையில் செய்து, ஊழலை ஒரு சமூக இயக்கமாக மாற்றியது திமுக. தேசம் என்று வந்துவிட்டால், காட்டிக்கொடுப்பது என்பது திமுகவின் தோற்றம் முதல் வளர்ச்சி வரை இன்று வரை சமீப உதாரணம்  காஷ்மீர் விவகாரம். இறைநம்பிக்கை என்பது ஓட்டு திருடும் வழி என்பது திமுகவின் கொள்கை. பரம்பரை ஆட்சி என்பது திமுகவின் சாபக்கேடு. பிணவீட்டில் ஒட்டு பொறுக்குவது என்பது திமுகவின் பிறப்புரிமை. மொழி விஷயத்தில், தமிழனை அழித்து, அவனது எதிர்காலத்தை அழித்து தான் வாழ்வது என்பது திமுகவின் அடிநாதம். மது மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒட்டு பொறுக்குவது திமுகவின் தந்திரம். மொத்தத்தில், பொருளை திருடு கொடுத்தவனுக்கே திருட்டு என்பது தவறு என்று பாடம் நடத்தி, தன்னை யோக்யனாக காட்டும் தெளிவு திமுக. 

அதிமுக இந்த விஷயத்தில் ஆவரேஜ். எனவே, திமுகவை அகற்றுவது என்பது மிக கடினமானது. ஆனால், மிக மிக அவசியமானது. விஷம் பரவினால், உயிர் போய்விடும். உதாரணமாக, போதை அடிமைகளை திருத்துவது போன்றது. எப்போது வேண்டுமானாலும் திரும்ப குடிப்பான்.  அதிமுக என்பது, ஒரு சாதாரண கொசு கடி போன்றது. அதிமுக தலைமை அறுபது கோடிக்கு தண்டனை பெற்றதும், திமுக பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்தும்  யோக்யனாக உலா வருவதே இதற்கு சாட்சி’’ என்கிறார் பாஜகவை சேர்ந்த மாநில நிர்வாகி.

’’பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி திமுகவுக்கு கிடைத்த வெற்றி இல்லை. ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் மட்டும் இல்லை என்றால் திமுக தோற்று இருக்கும். எடப்பாடி- பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தாலும் திமுக திணறி இருக்கும். அந்த 22 தொகுதி இடைத்தேர்தல் கூட தனியாக நடந்திருந்தால் 13 தொகுதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது வெற்றி இல்லை. முஸ்லிம்கள் புண்ணியத்தில் தட்டு தடுமாறி கிடைத்த வெற்றி. அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் பகுதிகளில் அதிமுக தான் ஜெயித்தது. திமுகவின் தோல்வி வேலூர் தேர்தலிலேயே ஆரம்பித்துவிட்டது. இனி எப்போதும் திமுவிற்கு தோல்வி தான்.  எடப்பாடி மிகவும் வலுவாகி வருகிறார். ஸ்டாலினை விட எடப்பாடியிடம் சாணக்கியத்தனம் அதிகம். ஸ்டாலினிடம் அது சுத்தமாக இல்லை’’ என்கிறார் பாமக நிர்வாகி பசுமை தாயகம்  ரமேஷ். 

Rajini

’’2021ல் திமுக 170 இடங்களை பிடித்து பெரும்பான்மை ஆட்சி அமைக்கப் போகிறது. இஸ்லாமியர்கள்,  கிறிஸ்துவர்களின் ஓட்டுக்களை மு.க. ஸ்டாலின் அள்ளி விடுவார். ஹிந்துக்களில், பிராமணர்களைத் தவிர ஸ்டாலினுக்குத் தான் ஓட்டளிப்பர். பிராமணர்களில் கூட சிலர் திமுக ஆதரவாளிகள் உள்ளனர். எனவே அடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் அவருடைய பிள்ளை. அவருடைய மாப்பிள்ளை நிதி மந்திரி. திமுகவில் புது இரத்தம் பாய்ச்சப்பட்டு புதியவர்களுக்கு தான் பதவிகள் கிடைக்கும். சசிகலா வெளியே வந்தால் அதிமுக மறுபடியும் உடையும். ஓட்டுக்கள் சிதறும். அது திமுகவுக்கு சாதகமாக அமையும்’’ என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி.