ஊரடங்கை மீறி அனுமதி சீட்டு வாங்க குவிந்த மக்கள் : விழிபிதுங்கி நின்ற போலீசார்!
அனுமதி சீட்டு வாங்கும் நடைமுறையில் முறையான அறிவுறுத்தல்கள் இல்லை என்று கூறி அந்த மையத்தை சுற்றிவளைத்து போராட்டம் செய்தனர்.
மதுரையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் அனுமதி சீட்டு வாங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அனுமதி சீட்டு வாங்கும் மையத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அனுமதி சீட்டு வாங்கும் நடைமுறையில் முறையான அறிவுறுத்தல்கள் இல்லை என்று கூறி அந்த மையத்தை சுற்றிவளைத்து போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், தகவலறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் என்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் பழைய நடைமுறையையே கடைப்பிடிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் ஏற்கனவே பின்பற்றும் நடைமுறைகளையே பின்பற்றலாம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் அனுமதி சீட்டு தொடர்பான முடிவுகள் தாமதமாக எடுக்கப்படும் என்று தெரிகிறது.